விவேகானந்தரின் விவேக மொழிகள்

  • மிருகபலத்தால் ஒரு போதும் உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால் மட்டுமே நாம் எமுச்சி பெற முடியும். நாம் அனைவரும் மகத்தான பணிகளைச் செய்யவே பிறந்திருக்கிறோம்.

  •  மேலைநாட்டு விஞ்ஞானத்தையும் நம் நாட்டு வேதாந்தத்தையும் இணையுங்கள். இவை இரண்டுமே வாழ்வின் அடிப்படை லட்சியங்களாகும்.

  • யார் ஒருவர் எதைப்பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை அவர் பெறவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.

  • துன்பம் விளைவதற்கு அறியாமையைத் தவிர வேறு எதுவுமே காரணமில்லை. இந்த உண்மையைப் பட்டபகல் வெளிச்சத்தைப் போல என்னால் தெளிவாக புரிந்துக் கொள்ளமுடிகிறது.

  • ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள்.

  • அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. நம்முடைய மனத்தை ஒரு முகப்பபடுத்துவதே அந்த வழி.

  • எதையும் வெறும் பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி என்ற இம்முன்றினையும் பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம்.

  • மூளை - தசைகள் - நரம்புகள் என்று உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தினையே பரவ விடுங்கள். மற்ற எந்த கருத்தினையும் உங்கள் மனத்திற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.

  • நாம் நினைக்கும் எண்ணங்கள் யாவும் விதை வடிவத்தை பெற்று பின்னர் நம் சூட்சம சரீரத்தில் சிறிது காலத்திற்கு தங்கி பின்னர் வெளிப்பட்டு வந்து அதற்குரிய பலன்களைத் தருகின்றன. இந்தப் பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.

  • ஒரு நல்ல கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அக்கருத்தையே நாளும் கனவு காணுங்கள். அக்கருத்தை முன்னிறுத்தியே வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.

  • எழுந்திருங்கள்! விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் போக்குவதற்கான பேராற்றல்! உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.இதைப் பூரணமாக நம்புங்கள்.

  • மற்றவர்களின் தெய்வீக இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வது தான். நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.

  • பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை.பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.

  • துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.வேறு எதனாலும் அன்று.

  • கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்; மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை தோள்களுமே; நமக்குத்தேவை. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.

தொகுப்பு: மு.சந்திரசேகர், இராசபாளையம்.

கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு?

  • கெடுக்கினும் கல்வி கேடுபடாது

  • கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது

  • கெடுவான் கேடு நினைப்பான்

  • கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.

  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.

  • கெட்டும் பட்டணம் சேர்

  • கெண்டையைப் போட்டு வராலை இழு.

  • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.

  • கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல. கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.

  • கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பினதெல்லாம் சொல்லாதே?

  • கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.

  • கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.

  • கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

  • கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.

  • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

  • கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்

  • கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்.

  • கையிலே காசு வாயிலே தோசை.

  • கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.

  • கையூன்றிக் கரணம் போடவேண்டும்.

  • கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்

  • கொடிக்கு காய் கனமா?

  • கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.

  • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.

  • கொடுத்தைக் கேட்டால் அடுத்ததாம் பகை.

  • கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?

  • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று, கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.

  • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.

  • கொல்லன் தெருவில் ஊசி விலை போகுமா?

  • கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?

  • கொள்ளிக்கு எதிர் போனாலும், வெள்ளிக்கு எதிர் போகலாகாது.

  • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

  • கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.

  • கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.

  • கோணி கோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.

  • கோத்திரமறிந்து பெண்ணைக் கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.

  • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

  • கோபம் சண்டாளம்.

  • கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?

  • கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

  • கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?

தொகுப்பு: ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

கூலியைக் குறைத்து வேலையைக் கெடுக்கலாமா?

  • கிட்டாதாயின் வெட்டென மற

  • கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.

  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

  • கீர்த்தியால் பசி தீருமா?

  • கீறி ஆற்றினால் புண் ஆறும்.

  • குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?

  • குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.

  • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.

  • குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.

  • குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?

  • குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.

  • குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.

  • குணத்தை மாற்றக் குருவில்லை.

  • குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.

  • குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

  • குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.

  • குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

  • குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.

  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.

  • குப்பை உயரும் கோபுரம் தாழும்.

  • குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?

  • குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

  • குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?

  • குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே

  • குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.

  • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.

  • குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.

  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்

  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?

  • கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.

  • குரங்கின் கைப் பூமாலை.

  • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.

  • குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.

  • கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.

  • கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?

  • கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.

  • கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. .

தொகுப்பு: ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

கழுதையையும் காலைப் பிடி.

  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.

  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.

  • காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.

  • காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.

  • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

  • காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?

  • காணி ஆசை கோடி கேடு.

  • காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்.

  • காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.

  • காப்பு சொல்லும் கை மெலிவை.

  • காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.

  • காய்த்த மரம் கல் அடிபடும்.

  • காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.

  • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

  • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

  • கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை.

  • காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.

  • காலம் போகும் வார்த்தை நிற்கும், கப்பல் போகும் துறை நிற்கும்.

  • காலுக்குத்தக்க செருப்பும், கூலிக்குத்தக்க உழைப்பும்.

  • காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.

  • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.

  • காற்றில்லாமல் தூசி பறக்குமா?

  • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

  • காற்றுக்கு எதிரிலே துப்பினால் முகத்தில் விழும். .

தொகுப்பு: ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

கள்ளிக்கு முள்வேலி போடலாமா?

  • கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?

  • கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.

  • கடலுக்குக் கரை போடுவார் உண்டா?

  • கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.

  • கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?

  • கடல் திடலாகும், திடல் கடலாகும்.

  • கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?

  • கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

  • கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.

  • கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டவனும் கெட்டான்.

  • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.

  • கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.

  • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.

  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

  • கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.

  • கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.

  • கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.

  • கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.

  • கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.

  • கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.

  • கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.

  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.

  • கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.

  • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.

  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

  • கண் கண்டது கை செய்யும்.

  • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?

  • கண்டதே காட்சி கொண்டதே கோலம்.

  • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.

  • கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

  • கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?

  • கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?

  • கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.

  • கதிரவன் சிலரை காயேன் என்குமோ?

  • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.

  • கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி

  • கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.

  • கரணம் தப்பினால் மரணம்.

  • கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?

  • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.

  • கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்

  • கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.

  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?

  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்

  • கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.

  • கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.

  • கல்லாதவரே கண்ணில்லாதவர்.

  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.

  • கல்வி அழகே அழகு.

  • கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

  • கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.

  • கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.

  • களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.

  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.

  • கள்ள மனம் துள்ளும்.

  • கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்.

  • கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!

  • கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!

  • கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.

  • கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.

  • கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு.

  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

  • கனிந்த பழம் தானே விழும்.

  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

  • கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

தொகுப்பு: ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

   

கவலை என்பது எதுவரை?

உயிரெழுத்தில் துவங்கும் தமிழ் பழமொழிகள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

  • அகல உழுகிறதை விட ஆழ உழு.

  • அகல் வட்டம் பகல் மழை.

  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.

  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.

  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.

  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.

  • அடாது செய்தவன் படாது படுவான்.

  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.

  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.

  • அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.

  • அந்தி மழை அழுதாலும் விடாது.

  • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

  • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.

  • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.

  • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.

  • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.

  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.

  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?

  • அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

  • அழுத பிள்ளை பால் குடிக்கும்.

  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.

  • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

  • அறச் செட்டு முழு நட்டம்.

  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.

  • அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.

  • அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.

  • அறமுறுக்கினால் அற்றும் போகும்.

  • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.

  • அறிய அறியக் கெடுவார் உண்டா?

  • அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.

  • அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

  • அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.

  • அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.

  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

  • அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.

  • அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

  • அற்ப அறிவு அல்லற் கிடம். அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.

  • அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?

  • அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.

  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

  • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.

  • ஆரால் கேடு, வாயால் கேடு.

  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.

  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

  • ஆழமறியாமல் காலை இடாதே.

  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலன் தரும்.

  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.

  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.

  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?

  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.

  • ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.

  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

  • ஆனைக்கும் அடிசறுக்கும்.

  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.

  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே...

  • இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.

  • இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.

  • இஞ்சி இலாபம் மஞ்சளில்.

  • இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

  • இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு.

  • இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.

  • இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.

  • இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

  • இரக்கப் போனாலும் சிறக்கப் போ.

  • இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

  • இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.

  • இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை. இராச திசையில் கெட்டவனுமில்லை.

  • இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

  • இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

  • இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.

  • இருவர் நட்பு ஒருவர் பொறை.

  • இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.

  • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?

  • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

  • இளங்கன்று பயமறியாது

  • இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.

  • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

  • இறங்கு பொழுதில் மருந்து குடி

  • இறுகினால் களி , இளகினால் கூழ்.

  • இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.

  • இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.

  • இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே

  • இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

  • ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.

  • ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.

  • ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.

  • ஈர நாவிற்கு எலும்பில்லை.

  • உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.

  • உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.

  • உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.

  • உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.

  • உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?

  • உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

  • உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.

  • உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.

  • உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.

  • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?

  • உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.

  • உலோபிக்கு இரட்டை செலவு.

  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

  • உளவு இல்லாமல் களவு இல்லை.

  • உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல.

  • உள்ளது போகாது இல்லது வாராது.

  • உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய

  • உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்

  • உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.

  • உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.

  • ஊணுக்கு முந்துவான் வேலைக்குப் பிந்துவான்.

  • ஊண் அற்றபோது உடலற்றது.

  • ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.

  • ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.

  • ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.

  • ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

  • ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.

  • ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.

  • ஐயர் வருகிறவரை அமாவாசை நிற்குமா?

  • ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.

  • ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?

  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

  • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

  • ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?

  • ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை

  • ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

  • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்.

  • ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.

  • ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

  • ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

  • ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.

  • ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

  • ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.

  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

  • ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.

  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

  • ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

  • ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

  • ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.

  • ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

  • ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

தொகுப்பு: ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

மந்தப்புத்தியுடைய சோம்பேறி

  • ஒரு தவறு செய்யும் மனிதன் அதைத் திருத்திக் கொள்ளாவிட்டால் அதுவும் ஒரு தவறாகி விடும்.

- கன்பூஷியஸ்

  • எல்லா இடங்களிலும் கடவுள் இருக்க முடியாது. ஆகவே அவர் தாயைப் படைத்தார்.

 -யூதர்

  • கடனாளியாகக் காலையில் எழுவதை விட இரவு பட்டினியாய்ப் படுப்பது மேல்.

-பெஞ்சமின் பிராங்க்ளின்
 

  • உலக ஆசைகளால் உந்தப்பட்டு, ஒவ்வொரு ஆசையையும் அனுபவித்து பூர்த்தி செய்ய மனிதன் துடிப்பது, எரியும் நெருப்பை அணைக்க அதில் மேலும் மேலும் நெய்யை ஊற்றுவதற்குச் சமம்.

-ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

  • சமயம் என்பது மெய்யுணர்வை அறிதல். அது அழகுப் பேச்சோ, தத்துவமோ, சித்தாந்தமோ அல்ல.

-சுவாமி விவேகானந்தர்.
 

  • எவன் உரிய வேளையில் விழித்து எழாமலும், உடல் பலமிருந்தும் சோம்பலில் ஆழ்ந்த கருத்திலும், சிந்தனையிலும் உறுதியற்று இருக்கிறானோ, அந்த மந்தப்புத்தியுடைய சோம்பேறி ஞானமார்க்கத்தை அடைய முடியாது.

-புத்தர்.

  • இழிய புழுவையும் கொடிய குற்றவாளியையும் நேசிக்க உன்னால் முடியாவிட்டால், உன் உள்ளத்துல் இறைவனை ஏற்றுக் கொண்டுள்ளதாக எவ்வாறு நீ நம்ப முடியும்?

-ஸ்ரீ அரவிந்தர்.

  • சோதனைகளும் துன்பங்களும் எந்த அளவிற்கு கடினமாக இருக்கின்றனவோ அதற்குப் பரிகாரமாக அந்த அளவுக்கு வெகுமதி கிடைக்கிறது. மேலும் எந்த அளவுக்கு சோதனைகள் நடக்கின்றனவோ அந்த அளவுக்கு இறைவனுடைய கருணையும் கிடைக்கும்.

-நபிகள் நாயகம்(ஸல்)
 

  • தீமையான காரியங்கள் நடக்கும் போது நல்ல காரியங்களும் நடக்கின்றன. அந்தக் கடினமான நேரங்களில், எத்தனை நண்பர்களும், குடும்பங்களும் நமக்கு உதவி செய்தனர். என்பதைக் கவனித்துப் பார். அது நமக்கு ஒரு நன்மையான காரியமாக இருக்கும்.

-இயேசு கிறிஸ்து.

தொகுப்பு: தாமரைச்செல்வி

கொடுப்பதைத் தடுக்க முடியுமா?

ஆண்டவனுக்கு உதவமுடியுமா?

ஆண்டவனுக்கு உதவுவதாக எப்போதும் சொல்லாதீர்கள். நீங்கள் அவருக்காகப் பணியாற்றும் பேறு பெற்ற பாக்கியசாலிகள் மட்டுமே. ஆகவே ஆண்டவனுக்கு உதவி எனும் சொல்லை உங்களது உள்ளத்திலிருந்தே நீக்கி விடுங்கள். நீங்களாக விரும்பி உதவி செய்ய முடியாது. அவரது விருப்பத்தினால்தான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். உங்களால் அவரை வழிபடத்தான் முடியும்.

கடவுள் நாயில் இருக்கிறாரா?

நீங்கள் ஒரு நாய்க்கு ஒரு பிடி சோறு கொடுக்கும் போது, அந்த நாயை கடவுளாகவே பாவித்து வழிபடுங்கள். ஏனென்றால் அந்த நாயினுள்ளும் கடவுள் இருக்கிறார். அவரே எல்லாமுமாய் இருக்கிறார். எல்லாவற்ரிலும் இருக்கிறார்.

இறைவன் விக்கிரகத்தில் மட்டுமா?

தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவரே, உண்மையில் அவரை வழிபடுகிறார். இறைவனை விக்கிரகத்தில் மட்டும் காண்பவருடைய வழிபாடு ஆரம்பநிலையில்தான் இருக்கிறது.

கடவுள் எங்கே குடியிருக்கிறார்?

கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வெறு ஒரு கடவுள் இல்லை. இந்த உண்மையை எவ்வளவு தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்கு சேவை செய்பவன் ஆகிறான்.

பகல் கனவுகள் எது?

உலகமாகிய இந்த நரகத்தில் ஒரே ஒரு நாளாவது, ஒரே ஒருவனின் இதயத்திற்காவது சிறிதளவு இன்பமும், மகிழ்ச்சியும் அளிக்க முடியுமானால் அது மட்டுமே நிஜமான சேவையாகும். இந்த உண்மையை வாழ்நாளெல்லாம் பட்ட கஷ்டங்களுக்குப் பிறகு நான் உணர்ந்து கொண்டேன். மற்றவையெல்லாம் பொருளற்ற வெறும் பகல் கனவுகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தடுக்கும் சக்தி இருக்கிறதா?

தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியை சிதறவிடக் கூடாது. அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும். யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதி உடையவராக இருக்கிறாரோ, அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது. 

விதி என்றால் என்ன?

 

விதி எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம். எனவே அதன் பொருட்டுத் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை,போற்றுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கப்பல்கள், தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களைச் சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?

-சுவாமி விவேகானந்தர்.

தொகுப்பு: தாமரைச்செல்வி

 பிச்சையெடுக்கும் பணக்காரர்கள்

சூரியனை மறைக்க முடியுமா?

சூரியனை விட மேகங்கள் சக்தி வாய்ந்தவையும் அல்ல; நீடித்தவையுமல்ல. மேகங்கள் எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும், அவற்றால் சூரியனை அடியோடு மறைத்து விட முடியாது. இதைப் போன்றுதான் ஒரு நல்ல மனிதனைத் தலைதூக்க விடாமல் செய்ய்யும் கயவர் கூட்டத்தின் முயற்சியும். 

-தாகூர்.

பயனில்லாத நம்பிக்கை

நமக்கு ஏராளமான சந்தேகம் தோன்றுகிறது. அதற்காக நாம் மனச்சோர்வடைய வேண்டியதில்லை. சுத்தமான கேள்விகள் நம்பிக்கையை வலிவும் வன்மையும் உடையவனாய் வைத்திருக்கும். ஐயப்பாட்டுடன் தொடங்கினாலன்றி ஆழ்ந்த நம்பிக்கை கொள்வதென்பது சாத்தியமில்லை. சிந்திக்காமல் மேலெழுந்தவாரியான நம்பிக்கை கொள்பவனின் நம்பிக்கையால் பயனில்லை. அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு இருப்பவன் ரத்தமும், தண்ணீரும் சிந்தி அந்நம்பிக்கையைப் பெற்றிருக்கிறான். முள்ளும் புதரும் நிறைந்த காட்டைக் கடந்து நல்ல பாதையை அடைபவனைப் போல் சந்தேகத்திலிருந்து உண்மையை அறிய முயன்றவன். 

-ஹெலன் கெல்லர்.

பிச்சையெடுக்கும் பணக்காரர்கள்

சிலரிடம் நிறைய இருந்தும், இன்னும் வேண்டும் என்று ஏங்குகிறார்கள். என்னிடம் மிகக் கொஞ்சமே இருந்த போதிலும் இன்னும் வேண்டும் என்ற ஏக்கம் என்னிடம் இல்லை. நிறைய இருந்தும் பிச்சையெடுக்கிறார்கள். என்னிடம் மிகக் கொஞ்சமே இருந்த போதிலும் மற்றவர்களுக்கு நான் கொடுக்கும் நிலையில் இருக்கிறேன். அவர்களிடம் ஒன்றும் இல்லை. என்னிடம் அனைத்தும் இருக்கிறது. அவர்கள் வாழ்வதில்லை. நான் வாழ்ந்து வருகிறேன்.

 -சர்.எட்வர்ட் டையர்.

நிரந்தரமில்லாத வாழ்க்கை

மனித வாழ்க்கை என்பது குறுகிய காலமே இருக்கக் கூடியது. அக்காலத்தில் தர்மத்தைப் போற்றி வாழ மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும். செல்வத்தைச் சேகரிப்பதிலோ இன்பத்தை நாடி அலைவதிலோ பொழுதை வீணாக்கி விடக் கூடாது. இவை எல்லாம் நிரந்தரமானவை அல்ல. நொடிப்பொழுதில் மாறிவிடக் கூடியவை.

 -ஸ்ரீ ரஹோத்தமச்சார்.

கட்டுப்பாடுகள் எதற்காக?

கட்டுப்பாடுகள் நமது மதத்தில் நமக்கு நன்மை கிடைப்பதற்காகத்தான் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. அவற்றை மதித்து நடப்பதுதான் தர்மம். அதுதான் கடசியில் நன்மையைக் கொடுக்கும். அதை மீறி நடப்பதால் தற்காலிகமான லாபங்கள் கிடைக்கலாம். ஆனால் அவை நிலைக்கக் கூடியவை அல்ல.

 -பகவத் கீதை.

மனத்தைச் சுத்தமாக வை

பயனில்லாமல் எதேச்சையாக மனம் செல்வதைத் தடுத்துக் கொள்ள வேண்டும். திடீரென்று ஒருவர், "நீ இப்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்" என்று கேட்டால், உடனே தயங்காமல் உள்ளதை உள்ளபடியே "இதை நினைத்தேன், இது என் மனத்தில் உள்ள எண்ணம்" என்று எளிதில் செல்லக்கூடியவாறு மனத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

- மார்க்கஸ் அவுரேலியஸ்.

அச்சம் உருவாக்கும் எண்ணங்கள்

உலகம் வீரர்களுடையது. சத்தியமான வார்த்தை. வீரனாக இரு. எப்போதும், "அச்சமில்லை!"என்று சொல்லிக் கொள். பிறருக்கும் இதைச் சொல். "அஞ்சாதீர்கள்! அச்சம் மரணம், அச்சம் பாவம், அச்சம் நரகம், அச்சம் அதர்மம், அச்சம் தீயொழுக்கம், உலகத்திலுள்ள தவறான எண்ணங்கள் எல்லாம் பயத்திலிருந்துதான் பிறந்திருக்கின்றன.

 -விவேகானந்தர்.

தெய்வத்தின் கருவியாக

தெய்வமே! என்னைத் தங்கள் கருவி ஆக்கிக் கொள்ளுங்கள். பிறர் என்னைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நான் பிறரைச் சமாதானப்படுத்துவேனாக. பிறர் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல், நான் பிறரைப் புரிந்து கொள்ள முயல்வேனாக. பிறர் என்னை நேசிக்கட்டும் என்று காத்திராமல், நான் அவர்களை நேசிப்ப்பேனாக. 

-புனித பிரான்ஸிஸ்.

தொகுப்பு: தாமரைச்செல்வி

வருங்காலத்தில் பெரிய மனிதனாக...

ஏற்ற குறிக்கோள் எது?

ஒவ்வொருவனும் தான் பெரிய கல்விமானாகவும், பெரும் புகழ் பெற்ற சீமானாகவும் விளங்க வேண்டுமென்று விரும்புவது இயற்கை. ஆனால், அவ்விதம் விரும்புகிறானே தவிர, அதற்கு வேண்டிய வழிகளைத் தேடப் பாடுபடுவதே கிடையாது. அவ்வாறு விரும்புகின்றவன் வாழ்க்கையில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்க, எவரும் அறியத்தக்கனவும், மேற்கொள்ளத்தக்கனவுமாகிய கொள்கைகள் சில உள்ளன என்பதையும் உணர வேண்டும். தன் அறிவு, ஆற்றல்களுக்கும் ஏற்ற ஒரு குறிக்கோளை ஒவ்வொருவனும் ஆராய்ந்து எடுத்தல் வேண்டும்.

-ராக்பெல்லர்.

செயலாகும் எண்ணங்கள்

ஒரு செயலை உன்னால் செய்ய முடியுமென்று நீ திட்டமாய் எண்ணுவாயானால் அது எவ்வளவு துன்பம் நிரம்பியதாயிருப்பினும் அதை நீ செய்தே முடிப்பாய். ஆனால் அதற்கு மாறாக இவ்வுலகத்தில் மிக எளியதாயிருக்கக் கூடிய செயலையும் உன்னால் செய்ய முடியாது என்று எண்ணுவாயின் அதை உன்னால் ஒருக்காலும் செய்ய முடியாது. சிறு குப்பை மேடுகள் கூட உனக்குக் கடக்க முடியாத பெரும் மலைகளாகத் தோற்றாமளிக்கும்.

-எமலிகோ.

இல்லாத சக்தி

கடற்கரையில் உடைந்து கிடக்கும் மரக்கலங்கள் போன்று காலமென்னும் அலைகளால் சிதறடிக்கப்பட்ட மனிதர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் சிறந்த திறமைசாலிகளாகத்தாம் இருந்தார்கள். ஆயினும் துணிவும், தன்னம்பிக்கையும் ஒரு முடிவுக்கு வரும் சக்தியும் இல்லாததனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

-பாஸ்டர்.

திடமான நம்பிக்கை

வருங்காலத்தில் பெரிய மனிதனாகக் கூடிய இன்றையச் சிறியவன், தன் மனதில் இப்பொழுதிலிருந்தே ஆயிரக்கணக்கான் இன்னல்கள் ஏற்படினும் அவ்ற்றை எதிர்த்து நிற்பதோடு மட்டுமில்லாது ஆயிரக்கணக்கான தோல்விகள் ஏற்படினும் வென்றே தீருவது என்ற திடமான நம்பிக்கை கொள்ள வேண்டும்.

-தியோடர் ரூஸ்வெல்ட்.

தைரியத்தைக் கைவிடாதே

ஒரு போதும் எடுத்த காரியத்தைக் கைவிடாதே! எத்தனையோ சந்தர்ப்பங்களும் மாறுதல்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவை தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். பெரிய நெருக்கடிகளுக்கிடையேதான் இறைவன் வெற்றி பெறுவதற்கான வழியையும் வகுக்கின்றான். ஆனால் நீங்கள் மட்டும் மனம் தளராதீர்கள்! ஒரு போதும் தைரியத்தைக் கைவிடாதீர்கள்! ஏனெனில் துன்பமும் இன்பமும் சேர்ந்து வருவதே உலக இயல்பு என்பதை உணர்ந்து எவன், தைரியத்தை இழக்காதிருக்கிறானோ அவனே பெரும் அறிவாளியாவான். எல்லா முதுமொழிகளிலும் மிகவும் முக்கியமானது எதுவென்றால் ஒரு போதும் தைரியத்தைக் கைவிடாதே எனும் எச்சரிக்கைதான்.

-கவிஞர் ஹோம்ஸ்.

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

எங்கே இருக்கிறது மகிழ்ச்சி?

மகிழ்ச்சியை வளருங்கள்

நன்கு மனம் விட்டுப் பலமாகச் சிரியுங்கள். உலகம் உங்களுடைய சிரிப்பில் பங்கு எடுத்துக் கொள்ளும். நீங்கள் அழுது பாருங்கள், உங்களுடைய அழுகையில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் ஒருவர்தான் அழுது கொண்டிருப்பீர்கள். உங்களுடைய அறிவின்மையும், வருத்தமும் இந்த உலகத்திற்குத் தேவையில்லாதவைகள். உங்களுடைய வருத்தத்தின் பளுவைச் சுமக்காமலேயே மற்றவர்கள் தாங்க முடியாத வருத்தத்தில் ஆழ்ந்து போயிருக்கிறார்கள். ஆகையால் மகிழ்ச்சியைப் பற்றிப் பேசி அதை மற்றவர்களிடம் பரப்ப முயற்சி செய்யுங்கள். உலக மக்களின் சந்தோசத்தை வளர்ச்சியில் ஈடுபடுங்கள்.

-வில்காய்

மகிழ்ச்சியைக் கொடுங்கள்

மகிழ்ச்சியை பற்றி நினையுங்கள். மகிழ்ச்சியாக இருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியை நம்புங்கள். பழக்கத்தின் மூலம் மகிழ்ச்சியை நிலை நிறுத்துங்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுங்கள்.

-நார்மன் வின்சென்ட் பீல்

மகிழ்ச்சியை அடைய

மகிழ்ச்சியை நாடிச் செல்வதில் பாதி மக்கள் தவறான பாதையில் செல்கின்றனர். எதையும் தன் சொந்தமாக்கிக் கொள்வது, பிறர் உழைப்பை அடைவது இவைதான் மகிழ்ச்சி என்று கருதுகின்றனர். மகிழ்ச்சி என்பது பிறருக்குத் தருவதில், பிறருக்காக உழைப்பதில்தான் இருக்கிறது. பெறுவதை விட தருவதுதான் மகிழ்ச்சி அடைவதற்குள்ள ஒரே வழி. அது ஒன்றேதான் அகலமான சீரான வெற்றிப்பாதை. 

-ஹென்றி டிரம்மண்ட்

மகிழ்ச்சியை அனுபவிக்க

பெரிய பணக்காரனாக வரவேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறு கிடையாது. வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழவேண்டும் என்று ஆசைப்படுவதிலும் சிறிது கூட தவறு கிடையாது. ஆனால் ஒருவன் சேர்க்கும் செல்வம், அனுபவிக்கும் மகிழ்ச்சி மற்ற யாருக்கும் சிறிது கூட துன்பம் தராமலிருக்கும்படி  பார்த்துக் கொள்ள வேண்டும்.

-ஆண்ட்ரூ கார்னீஜி

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

வாழ்க்கையைக் கோட்டை விடலாமா?

அர்த்தமுள்ள வாழ்க்கை

நம்முடைய நாகரீகம் எப்படி பல பொருள்களை நமக்கு சொந்தமாக்கிக் கொள்வது என்பதைத்தான் சொல்லிக் கொடுக்கிறது. சொத்து சேர்க்கும் ஆசையைத் தவிர்த்து, நம்மிடம் இருக்கும் சொத்தை எப்படி உபயோகமாகச் செலவிடுவது என்பதைப் பற்றி சொல்லிக் கொடுத்தால் பல நன்மைகள் உண்டாகும். தன்னிடமிருப்பதை எப்படி நல்லமுறையில் செலவு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளாதவ்னுக்கு சுதந்திரமும், அர்த்தமுள்ள வாழ்க்கையும் கிடைக்காது.

-கேப்ரியல் மார்ஸெல்

வாழ்க்கைக்கு சக்தி

வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியத்தைப் பெற விரும்புபவர்கள், எதற்கும் கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். உயர்ந்தவைகளைப் பற்றியே நினைக்க வேண்டும். எப்போதும் புன்னகையுடன் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உயர்ந்த இலட்சியங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இப்படி இருப்பதைக் கடினமான பயிற்சியின் மூலம் ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டு விட்டால், வாழ்க்கை சுவையானதாக மாறிக் கொண்டு வரும். உடலையும் மனதையும் ஆத்மாவையும் கடினமான முயற்சியால் உயர்த்திக் கொண்டவனுக்குப் பலமும், ஊக்கமும் கிடைக்கும். உழைப்பு மனத்திலும் உடலிலும் குடிகொண்டிருக்கும் சோம்பேறித்தனத்தை அகற்றுகிறது. ஆத்மாவை வலுப்படுத்துகிறது. சோர்வைத் தரும் நிகழ்ச்சிகளை சமாளிக்கும் தன்மையை, சக்தியைத் தருகிறது.

-நார்மன் வின்சென்ட் பீல்

சுவையான வாழ்க்கை

அளவுக்கு மீறிப் பணம் சேர்க்க வேண்டும் என்கிற வெறியில் உங்களை நீங்கள் வாட்டிக் கொள்ளாதீர்கள். உண்மையான உழைப்பின் துணையுடன், நியாயமாகக் கிடைப்பதைக் கொண்டு அதை நன்கு அனுபவிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்பவர்களுடைய வாழ்க்கை சுவையுடையதாக இருக்கும்.

-ஆதி சங்கராச்சாரியார்

வாழ்க்கையைத் தள்ளிப் போட்டு

வாழ்க்கையை நன்கு அனுபவிக்காமல் அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டு வரும் மனித சுபாவம் மிகவும் வருந்தத்தக்கது. நம் கண்களுக்கு முன்பு, தொடும் தூரத்தில் மலர்ந்து மணம் வீசும் ரோஜா மலர்களை அனுபவிக்காமல், ஆகாயத்திலிருந்து ஒரு அழகான மலர்த் தோட்டம் குதிக்கப் போகிறது என்று அனைவரும் கனவு காண்பதிலேயே தங்களுடைய வாழ்க்கையை வீணடித்து வருகிறார்கள். குழந்தை, பெரிய பையனாக வளர்ந்தவுடன், வேலையில் சேர்ந்து மற்றவர்களால் மதிக்கப்படும் மனிதனாக மாறிய பின்புதான் தன்னால் இன்பமாக வாழமுடியும் என்று நினைக்க ஆரம்பிக்கிறான். வேலையில் சேர்ந்தபின்பு, திருமணம் செய்து கொண்டால்தான் இன்பம் கிடைக்கும் என்று நினைக்கிறான். திருமணம் செய்து கொண்டபின்பு, வேலையிலிருந்து ஓய்வு பெற்றால்தான் இன்பம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். மனிதர்கள், இப்படித் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்து, இன்பத்தை முற்றிலுமாகக் கோட்டைவிட்டு விடுகிறார்கள்.

-ஸ்டீபன் லீ காக்

அவமான வாழ்க்கை

உங்களுக்கு நேரமில்லையா? - நாகரீக மனிதனுடைய பெரிய நோய் இது. உங்களுக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும் நேரமில்லையென்றால் நீங்கள் கட்டாயம் தவறாக வாழ்ந்து வருகிறீர்கள். அப்படிப்பட்ட அவமான வாழ்க்கையை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். இந்தமாதிரி வாழ்க்கை வாழ்வதிலிருந்து உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளாவிட்டால், வாழ்க்கையில் இன்பம் என்பதை சிறிதும் காணாமல் உங்களை அழித்துக் கொண்டு விடுவீர்கள்.

-அலெக்ஸாண்டர் ஸோல்ஜினிட்ஸின்

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

காதல் வந்துவிட்டால்...

  • நண்பனைக் கஷ்டகாலத்தில் தெரிந்து கொள்ளலாம்; வீரனைப் போர்க்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்;  நேர்மையானவனைக் கடன் கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்; துணைவியைச் செல்வம் போனபின்பு தெரிந்து கொள்ளலாம்; உறவினரைத் துன்ப காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.

-இந்தியா.

  • உன்னைப் புண்படுத்துவது எது என்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எது என்பது உனக்குத் தெரியும்.

-ஆப்பிரிக்கா.

  • மணவாழ்க்கை என்பது முற்றுகையிடப்பட்ட ஒரு கோட்டை மாதிரி. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.

-அரேபியா.

  • பயத்தைக் குறை-நம்பிக்கையைப் பெருக்கு! உணவைக்குறை-உழைப்பைப் பெருக்கு! குடியைக் குறை-மூச்சைப் பெருக்கு! பேச்சைக் குறை-செயலைப் பெருக்கு! வெறுப்பைக் குறை-அன்பைப் பெருக்கு! அனைத்து நன்மைகளும் உனக்கே.

-ஸ்வீடன்.

  • துறவிகள் மெலிந்தால் அழகு. நான்கு கால் விலங்கினங்கள் கொழுத்தால் அழகு. மனிதர்கள் படித்தால் அழகு. பெண்கள் மணந்தால் அழகு.

-மியான்மர்.

  • தெரிந்தவையெல்லாம் சொல்ல வெண்டுமென்பதில்லை! கேட்டதையெல்லாம் நம்ப வேண்டுமென்பதில்லை! முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டுமென்பதில்லை.

-போர்ச்சுக்கல்.

  • பூமியில் பயனற்ற காரியங்கள் நான்கு: பலனற்ற மண்ணில் பெய்த மழை; சூரிய வெளிச்சத்தில் வைத்த விளக்கு; குருடனை மணந்த அழகி; நன்றி கெட்டவனுக்குச் செய்த நற்காரியம்.

 -அரேபியா.

  •  மூன்று உயிரினங்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் காலத்தைக் கழிப்பவை. அவை; பூனைகள், ஈக்கள்; காதலிகள்.

- பிரான்ஸ்.

  •  தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை, காதல் வந்துவிட்டால் அழகே தேவையில்லை.

- ஆப்கானிஸ்தான்.

  • வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு தேர்வு. ஆனால், அதன் முடிவுகளை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது.

- நைஜீரியா.

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

யார் பொய் சொல்கிறார்கள்?

  • ஒன்று நிகழப் போகும் முன்பே அதைப் பற்றிக் கவலை கொள்வது இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது.

-யாலப் தாம்சன்.

  • தற்பெருமை எங்கு முடிகிறதோ, அங்கு கண்ணியம் தொடங்குகிறது.

-பங்.

  • முயற்சி என்பது இதயத்துள் உண்டாகும் உணர்ச்சி மட்டுமன்று, ஆற்றலைக் கிளப்பும் ஒரு தூண்டுகோள் அது.

-தாகூர்.

  • கோழைகளைத் தவிர வேறு யாரும் பொய் சொல்வதில்லை.

-மர்பி.

  • அதிகமாகப் பேசுபவர்கள் குறைவாகச் சிந்திக்கிறார்கள்.

-டிரைடன்.

  • வேலை மனிதனைக் கொல்வதில்லை. கவலைதான் கொல்லும்

-பீசீசர்.

  • நீயும் உடன்படாவிடில், நீ தாழ்ந்தவன் என்ற உணர்வை உன் மேல், எவராலும் எங்கும் சுமத்த முடியாது.

 -எலினார் ரூஸ்வெல்ட்.

  •  நீங்கள் விரும்பும் உரிமைகளை எல்லாம் பிறருக்கும் அளித்து விடுங்கள்.

- இங்கர்சால்.

  •  மரியாதையாகப் பேசுவதும், நடப்பதுவும் செலவில்லாத செல்வங்கள்.

- செர்வாண்டில்.

  • ஓடுவதில் பயனில்லை, நேரத்தில் புறப்படுவதே தேவை.

- ஜீந்தொஃபோன்தேன்.

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

யானையிடம் போரிட்டுத் தோற்பது நல்லது.

மிகவும்...

  • மிகவும் கசப்பானது தனிமையே!

  • மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே!

  • மிகவும் துயரமானது மரணமே!

  • மிகவும் அழகானது அன்புணர்வே!

  • மிகவும் கொடுமையானது பழி வாங்குதலே!

  • மிகவும் கவலை தருவது செய்நன்றி மறப்பதே!

  • மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பே!

  • மிகவும் வெறுமையானது இல்லையென்பதே!

  • மிகவும் ரம்மியமானது நம்பிக்கையே!

-டாக்டர் விஸ்பிரட் பங்க்

எது நல்லது?

  • தன் அருமையை உணராதவர் பொருளை இரந்து பெறுவதிலும் பிச்சை எடுப்பது நல்லது.

  • அன்புடன் உபசரியாதவர் வீட்டில் விருந்துண்பதை விட பட்டினியாயிருப்பது நல்லது.

  • எளிய ஒரு முயலைக் கொல்வதை விட யானையோடு போரிட்டுத் தோற்பது நல்லது.

  • இனிய பண்புகளற்ற பெண்களிடம் கூடுவதை விட துறவு கொள்வது நல்லது.

  • பகைவரோடு நட்பாயிருப்பதை விட பாம்பிடம் பழகுவது நல்லது.

  • அருளாளர்க்கு ஆதரவு செய்யாத நிலையில் இறப்பது நல்லது.

  • வஞ்சகர்களுடன் சேர்ந்து வாழ்வதை விட தனித்து வாழ்வது நல்லது.

-குமரேச சதகம்.

தேவையான மூன்றுகள்

  • இருக்க வேண்டிய மூன்று - தூய்மை, நீதி, நேர்மை.

  • ஆள வேண்டிய மூன்று - கோபம், நாக்கு, நடத்தை.

  • பெற வேண்டிய மூன்று - தைரியம், அன்பு, மென்மை.

  • கொடுக்க வேண்டிய மூன்று - இரப்போர்க்கு ஈதல், துன்புறுவோர்க்கு ஆறுதல், தகுதியானவர்க்குப் பாராட்டு.

  • அடைய வேண்டிய மூன்று - ஆன்ம சுத்தம், முனைவு, உள்ள மகிழ்வு.

  • தவிர்க்க வேண்டிய மூன்று - இன்னா செய்தல், முரட்டுத்தனம், நன்றியில்லாமை.

  • பரிந்துரைக்க வேண்டிய மூன்று - சிக்கனம், தொழிலூக்கம், நாணயம்.

  • நேசிக்க வேண்டிய மூன்று - அறிவு, கற்பு, மாசின்மை.

-மகாவீரர்

மரிக்கும் முன்னால்...

  • பேசும் முன்னால் நீ கவனமாய்க் கேள்.

  • எழுதும் முன்னால் நீ யோசிக்கத் தவறாதே.

  • செலவழிக்கும் முன்னால் நீ சம்பாதிக்கப் பார்.

  • பிறரை விமர்சிக்கும் முன்னால் உன்னை எண்ணிப் பார்.

  • பிரார்த்தனைக்கு முன்னால் மாற்றாரை மன்னித்து விடு.

  • ஓய்வு பெறும் முன்னால் சேமித்து வை.

  • மரிக்கும் முன்னால் கொடுத்து விடு.

-ராபர்ட் கால்டுவெல

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

குரங்கை நம்பி பணத்தைக் கொடுக்கலாமா?

  • ஏழ்மையிலிருந்து செழுமைக்குப் போகும் பிரயாணம் மிகக் கடினம். ஆனால் திரும்பி வருவது எளிது.

-ஜப்பான்.

  • பூமியில் குடிசை கட்டுவதற்கு சக்தியற்ற சிலர், ஆகாயத்தில் அநேக அரண்மனைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

-வேல்ஸ்.

  • தொடர்ந்து மூன்று நாள் பசித்துக் கிடந்தால், ஒரு மனிதன் திருடவும் துணிவான்.

-கொரியா.

  • உங்கள் சந்ததியினருக்குச் சரியான இரண்டு வழிகளைச் சொல்லிக் கொடுங்கள். அவை இலக்கியமும் விவசாயமும்.

-சீனா. 

  •  தண்டிக்கப்படுகிறவன் திருடனல்ல. திருடிவிட்டு அகப்பட்டுக் கொள்கிறானே அவன்தான் திருடன்.

-செக்கோஸ்லோவேகியா.

  • பொய்யினால் வரும் இன்பத்தை விட உண்மையால் வரும் துன்பம் எத்தனையோ வகைகளில் சிறந்தது.

-டென்மார்க்.

  • வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு பரீட்சை. அதன் முடிவை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது.

  -துருக்கி.

  •  உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விட முந்தச் செய்கிறது.

- நைஜீரியா.

  •  நூறு ஆண்டு வாழ்பவனைப் போல வேலை செய். நாளையே இறந்து விடுபவனைப் போல் சிந்தனை செய்.

- பல்கேரியா.

  • பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்விதம் அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்க வேண்டும்.

- பிரான்ஸ்.

  • இனிப்புப் பண்டங்கள் உடலைக் கெடுக்கின்றன. புகழ் சிறந்தவர்களையும் கெடுத்து விடுகிறது.

- பின்லாந்து.

  • மரம் ஏறத் தெரியாதவன் குரங்கை நம்பி பணத்தைக் கொடுக்கக் கூடாது.

- பெல்ஜியம்.

  • இளமை முதுமையை நோக்கி விரைகிறது. இன்பம் துன்பத்தை நோக்கி நகருகிறது.

- ருமேனியா.

 தொகுப்பு: தாமரைச்செல்வி.